விடத்தல் தீவின் விந்தைமிகு மருந்தகம்.

பொனிப்பாஸ். “ஊர்க்குருவி”

அம்பலத்திற்கு அருகில் ஆரம்பமான வீதியின் அருகிலோர் இத்திமரம் அதனருகில் சிறியதோர் ஆதிகாலக் கட்டிடம்

ஆஸ்பத்திரி எனும்பெயரில்

உவர்காற்றின் தாக்கத்தால் உலர்ந்துபோன சுவர்களும் களிமண்ணும் காட்டுக்கல்லும்

குடைமார்க் ஒட்டுடன்

காட்டுமரக் கூரையும் காட்டியதே பழமைதனை

முற்றிய காட்டுமரம் முறையாய் தறித்தெடுத்து சீராய் செப்பனிட்டு செய்த தூண்கள்பல நிறமதுவும் சாம்பலாய் நின்றனவே கம்பீரமாய்

நோயாளர் அமர்ந்திட நீளமான வாங்குகளும்

இருபுறம் கையுள்ள

இலகுவான இருக்கைகளும்

வந்தோர் இளைப்பாறும் வராண்டாவும் இருந்ததுவே

வந்திடுவார் வைத்தியர் வாரத்தில் சிலநாட்கள்

வருத்தம் என்று வருவோரை வரிசையாய் பரிசோதித்து வாங்கிடவே மருந்தினை

வழங்குவார் துண்டொன்று

வந்த நோயாளரை வைத்தியரிடம் காட்டியே நோயாளர் தேவைகளை நாசூக்காய் கூறியே

அவசிய பணிசெய்தார்

அரச இரத்தினம் என்பவரே

பெப்பர்மன் ருசியில் பருகிட ஓர் மருந்து பச்சைக் கசப்பாய்

பருகிட சில மருந்து

ருசியது ஏதுமின்றி

தண்ணிபோல் ஓர்மருந்து

கண்ணாடிக் குவளைகளில்

கலர்கலராய் மருந்துண்டு வயிற்றுலி காய்ச்சல் வாந்திபேதி நெஞ்சுவலி குணமாகக் கலந்துகலவை கொடுத்திடுவார் சின்னையாவும்

பதறிப்போய்

பல் வருத்தம் என்று வருவோர்க்கு பஞ்சில் மருந்துதோய்த்து பல்லிடுக்கில் சரியாய்வைத்து பல்வலி நீங்கிட

பணியும் செய்தாரே

சொறிசிரங்கு படர்த்தி என சொல்லிக்கொண்டு வந்தோர்க்கு களியொன்று வெள்ளையாய் கடதாசியில் மடித்து களுவியபின் பூசு என

கலவையாளர் தந்திடுவார்

காயத்துடன் வந்தோரை கவனமாய் இருத்தியே காயமதை சுத்தமாக்கி

கவனமாய் மருந்திட்டு காயமதை ஆறவைத்தார் இராசரெத்தினம் என்பவரே

வெட்டுக்காயத்திற்கும் வேதனை தெரியாமல் தையல் போட்டு

தரமான மருந்திட்டு

ஆறவைத்தே காயமதை

அளப்பரிய சேவைசெய்தார்

கை,கால், மூட்டுவலி கடுமையான இடுப்புவலி

கண்டுமே வருவோர்க்கு கறுவாத் தைலம் போல் களி பூசித் தேய்த்திடுவார் கெளது காக்காவும்.

அரசன் உயரம் என்றால் அதைவிட சின்னையா இராசரெத்தினம் இங்கே இருவருக்கும் சமமாக கொஞ்சம் குள்ளமாய் கௌதும் அங்கிருந்தார்

நோய் என்று வந்தோரை நோகாமல் மனமதுவும் உயர்வான சேவை தந்த உன்னத மருந்தக நினைவலை என்றும் நீங்காதே மனதைவிட்டு.

Community

Celebrating Vidathaltheevu's beauty and cultural heritage.

Contact Us

vtsym2024@gmail.com

+94717477503

© 2025. All rights reserved.

விடத்தல் ஊற்றின் விளைநிலம் ஜோசப்வாஸ்நகர்